கங்கா, யமுனா, காவிரி ஆகிய நதிகளின் தண்ணீரைக் கொண்டுவந்து அபிஷேகம் செய்யப்படவுள்ளது.

கலசத்தில் ஊற்றப்படும் நீர் தங்கள் மேல் விழ வேண்டும் என்பதற்காக மக்கள் முண்டியடித்து வருவார்கள் என்பதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்க புண்ணிய நீர் சொட்டு நீர் மூலம் அனைவரின் மீதும் விழுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வைக் காண தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் தஞ்சையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். தஞ்சை நகரில் திரும்பிய பக்கம் எல்லாம் மனிதத் தலைகளாக காட்சியளிக்கிறது.


குடமுழுக்கு விழாவிற்கான பூர்வாங்க பூஜைகள் ஜனவரி 27ஆம் தேதி நடைபெற்றது. யாக கால பூஜைகள் பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. நேற்று ஆறாம், ஏழாம் யாக கால பூஜைகள் நடைபெறுகின்றன. இன்று காலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பக்தர்கள் குவியத் தொடங்கிவிட்டதால் நகரில் பெரும்பாலான விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. கூட்ட நெரிசல் காரணமாக நகருக்குள் பேருந்துகள் அனுமதிக்கப்படவில்லை. நகருக்கு வெளியே தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 21 தற்காலிக வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.